அட, நம்மையும் கவனிக்கிறாங்கப்பா.......

Sunday, August 5, 2012

மழை வேண்டி ஒரு பிரார்த்தனை

என் சொந்த ஊரான மன்னார்குடியில் இன்று ஒரு முக்கியமான பிரார்த்தனை நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. தற்போது மழை பெய்ய வேண்டிய காலமாக இருந்தாலும் எங்கும் மழையே இல்லை. இதற்காக பிரார்த்தனை செய்யப் போகிறோம்.  

முன் காலத்தில் வருண ஜபம் என்று ஒரு நிகழ்ச்சி நடக்கும். கழுத்து அளவு தண்ணீரில் இருந்துகொண்டு இந்த ஜபத்தை செய்தாள் மழை வரும் என்று ஒரு ஐதீகம். இன்றைய தேதியில் வருண ஜபம் செய்ய அந்த அளவு ஆட்கள் இல்லை என்பதால் எங்கள் ஊர்ப்  பெரியவர்கள் வேறு ஒரு வழியை தேர்ந்தெடுத்திருக்கிரார்கள். ஆண்டாளின் "திருப்பாவை"யில் வரும் நான்காவது பாடலான "ஆழிமழைக்கண்ணா" என்ற பாசுரத்தை ஓதுவது என்று முடிவு செய்திருக்கிறார்கள். உங்களுக்காக அந்த பாசுரம் இங்கே:
 
ஆழிமழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுட்புக்கு முகந்து கொடார்த்தேறி
ஊழிமுதல்வ னுருவம்போல் மெய்கறுத்துப்
பாழியந்தோளுடைப் பற்பநாபன் கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்க முதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்.

விளக்கம்: உலகில் நல்ல செயலைச் செய்யத் தொடங்கினால் பலரும் வந்து தன்னாலியன்ற உதவியைச் செய்வார்கள். நல்ல மழைபொழிந்து நாட்டில் நன்மை ஏற்படுவதற்காக கிருஷ்ண பக்தர்களான ஆயர் சிறுமியர் நோற்கும் நோன்புக்குத் தானும் உதவி செய்யவேண்டும் என்ற நோக்கத்தோடு மழையைத் தரும் வருணதேவன் இவர்களின் எதிரில் வந்து நிற்கிறான். அவனை ஆழிமழைக்கண்ணா! என்றழைத்து நாங்களும் கண்ணனும் மகிழ்ந்து நீராடும்படி மழைபொழிய வேண்டும் என்று அவனுக்குக் கட்டளை இடுகிறார்கள். மழைபொழியும் செயலைக் கண்ணும் கருத்துமாக நடத்தும் வருணதேவனே! உன்னுடைய கொடைத்தன்மையில் சிறிதும் மறைத்துக் கொள்ளாமல் மழைபொழிந்து எல்லோருக்கும் உதவவேண்டும். நிறைய மழையைத் தர தண்ணீருக்கு எங்கே போவது என்று நினையாதே! நடுக்கடலுக்குச் சென்று முகத்தைத் தண்ணீரில் வைத்து உனக்குத் தேவையான அளவு தண்ணீரைப் பருகு; ஆரவாரித்துக்கொண்டு வானத்திற்குச் செல்; ஊழி முதல்வனின் உருவம்போல் கருமை நிறத்தைப் பெறு; மிக்க வலிமையுடைய பத்மநாபனின் வலக்கையில் இருக்கும் சக்கரம்போல் சுடரொளியால் மின்னலை மின்னிக்காட்டு; பகவானின் கையில் இருக்கும் வலம்புரிச் சங்குபோல் ஒலித்துக்காட்டு; ராமனுடைய கையில் இருக்கும் திருச்சார்ங்கத்திலிருந்து கிளம்பும் ராமபாணம்போல் அனைவரும் வாழ இவ்வுலகினில் மழைபொழிந்திடாய்! நாங்களும் கண்ணனும் மகிழ்ந்து நீராட தாமதிக்காமல் மழைபொழிந்திடு என்கிறார்கள்.